WatTruyen.Top

வரம் நீயடி..

💞 01 💞

jamunaguru

அஞ்சலியை அந்த நிலையில் பார்க்கக்கூடும் என உதயா எண்ணியதேயில்லை.

மருத்துவமனையின் அறையொன்றில் படுக்கையில் லேசாக சாய்ந்து அமர்ந்திருந்தாள் அஞ்சலி தன் எதிரில் நின்றவனை வெறித்தபடி.

மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த உதயா.. அந்த அறையின் கதவு திறந்திருந்ததால் அஞ்சலியை பார்க்க நேர்ந்தது.

அஞ்சலியின் அருகில் படுக்கையில் குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

“இந்த குழந்தைக்கு அப்பா நான்.. அது உனக்கு நியாபகம் இருக்கட்டும்..” என்றான் அஞ்சலியின் எதிரில் நின்றிருந்தவன்.

சில நொடிகள் அவனை வெறித்து பார்த்த அஞ்சலி.. “அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க மிஸ்டர் சம்பத்.. இந்த உலகத்துல நீங்க மட்டும் தான் ஆம்பிளையா..” என கேட்டாள்.

“ஏய்..” என சீறியபடி கையை ஓங்கியவனை தடுத்தார் அவனருகில் நின்றிருந்த பெண்மணி.

“அவன் ஆம்பிளை டீ.. அப்டி இப்டி இருக்கத்தான் செய்வான்.. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீ எங்ககிட்ட கையேந்துற நிலைமைல தான் இருக்க.. அதை மறந்துடாத..” என்றார் அந்த பெண்மணி.. சம்பத்தின் அம்மா.

“உங்ககிட்ட கையேந்துற நிலைமைக்கு நான் என்னைக்கும் வரமாட்டேன்..” என உறுதியான குரலில் சம்பத்தின் அம்மாவை பார்த்து சொன்ன அஞ்சலி.. இன்னும் கையை எப்போது ஓங்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த சம்பத்தை பார்த்தாள்.

“உங்க ஆம்பிளைதனத்தை உங்களோடவும் உங்க ப்யூச்சர் வைப் மாயாவோடவும் மட்டும் வச்சுக்கோங்க மிஸ்டர் சம்பத்.. என்கிட்ட வேண்டாம்.. சீக்கிரமே என்னோட டைவர்ஸ் நோட்டீஸ் உங்களுக்கு வந்து சேரும்..” என்றாள் அஞ்சலி அதே உறுதியோடு.

“நாளைக்கே.. ஹாஸ்பிடல் பில்லை கட்டிட்டு வெளியே போனு துரத்துவாங்க.. அப்ப நம்மகிட்ட தான்டா வந்து நிக்கணும்.. அப்ப பார்த்துக்கலாம் வா..” என சம்பத்தின் அம்மா அவனை இழுத்துச் சென்றார்.

அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்த சம்பத்தின் அப்பா அஞ்சலியிடம்.. “அம்மாடி..” என ஏதோ சொல்லத் தொடங்க.. “மாமா.. ப்ளீஸ்..” என கையெடுத்து கும்பிட்ட அஞ்சலி.. வாசலை நோக்கி கையை காட்டினாள்.

அதற்கு மேல் நிற்காமல் வாடிய முகத்துடன் சென்றுவிட்டார் அவர்.

அவரும் சென்றுவிட்டதை உணர்ந்ததும் அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டினாள் அஞ்சலி.

இனி என்ன செய்யப் போகிறேன்.. இந்த குழந்தையையும் வைத்துக்கொண்டு.. அவர்கள் சொன்னது போல அவர்கள் காலில் தான் விழுந்தாக வேண்டுமா.. அப்பா.. அம்மா.. என்னையும் உங்களோடவே கூட்டிட்டு போயிருக்க கூடாதா..

இப்டி நரகத்துல நான் தவிக்கிறேனே ப்பா.. அம்மா அப்பா உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்.. ஆனா அவனையோ என்னையோ பார்த்துக்க கூட இங்க யாருமில்லையே ப்பா.. ம்மா.. என மனதுக்குள் எண்ணங்கள் எழ கண்ணீர் வடித்தாள் அஞ்சலி.

ஹாஸ்பிடல் பில்லை கட்டணும்.. இங்க இருந்து வெளியே போகணும்.. இந்த குழந்தையை பார்த்துக்கணும்.. நான் என்ன பண்ணப்போறேன்.. என பரிதவித்த அஞ்சலி.. அறை வாயிலில் யாரோ நிற்பதை உணர்ந்து அவசரமாக கண்களை துடைத்தாள்.

காலில் வந்து விழுவாய் என சொல்லி சென்றவர்கள் தான் மீண்டும் வந்து விட்டனரோ.. அவர்கள் முன்னிலையில் கண்ணீர் சிந்துவதா என்ற எண்ணத்துடன் கண்ணீரை துடைத்தாள்.

உடலும் மனமும் சோர்ந்திருக்க மெல்ல விழிகளை திறந்து யாரென பார்த்தாள் அஞ்சலி. உதயா தான் நின்றிருந்தான் என்ன நடக்கிறது என்பது புரியாத நிலையில்.

எதிரில் நிற்பது அவர்கள் அல்ல.. தன் பள்ளித் தோழன் உதயா என்பது புரிந்தது. உதயாவை கண்டதும் உயிர்வாழ கிடைத்த கடைசி பற்றுதல் போல தோன்றியது அஞ்சலிக்கு.

அவளருகில் வந்த உதயா.. எதுவும் பேசாமல் நின்றிருக்க.. அவன் கைகளை பற்றிக்கொண்ட அஞ்சலி.. “உதி.. ப்ளீஸ் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயேன்..” என கண்ணீருடன் கேட்டாள்.

மௌனமாக தலையசைத்தான் உதயா. நன்றியோடு அவன் முகம் பார்த்தாள் அஞ்சலி.

குழந்தை விழித்து அழத்தொடங்க.. அஞ்சலி குழந்தையை கையில் எடுத்தாள்.. “இப்ப வந்துடுறேன் அஞ்சு..” என்ற உதயா அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

இரண்டு நாள் ஆகுது செல்லம் நீ பிறந்து.. நான் உன்னை எப்டி பார்த்துக்க போறேன்.. எனக்கு பயமா இருக்கு இப்பத்தான்.. என குழந்தையோடு உரையாடிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.

வெளியே சென்ற உதயா சில நிமிடங்களில் திரும்பி வந்தான். உண்மையில் அவன் திரும்பி வந்ததை நம்ப முடியாமல் தான் பார்த்தாள் அஞ்சலி.

“உதி..” என கேள்வியாக அவனை பார்த்தாள் அஞ்சலி.

“பில்லை கட்டிட்டேன் அஞ்சு.. அம்மாவுக்கு போன் பண்ணினேன்.. அவங்களும் வந்துடட்டும்.. நாம கிளம்பலாம்..” என்றான் உதயா.

“உதி.. நிஜமாவா..” என நம்ப முடியாதவள் போல விழிகளை விரித்தாள் அஞ்சலி.

“உன்னை இப்டி தனியா.. எ.. எப்டி அஞ்சு விட்டுட்டு போவேன்..” என்ற உதயாவின் வார்த்தைகளை கேட்ட போது.. தான்.. தனக்கும் தன் குழந்தைக்கும் இந்த உலகத்தில் யாரோ ஒருவர் இருக்கிறார்கள் என்ற நிம்மதி தோன்றியது அஞ்சலிக்கு.

உதயாவின் அம்மா சாரதா வந்ததும் கவனிக்க ஆளில்லாமல் அஞ்சலி இருந்த நிலையை பார்த்ததும் முதலில் கண்கள் கலங்கினார்.

“அப்பா அம்மா எங்கடா..” என அஞ்சலியின் குழந்தையை கையில் ஏந்தியபடி கேட்டார் சாரதா.

“அ.. அப்பா அ.. அம்மா தவறி இரண்டு வருஷம் ஆச்சு ம்மா..” என்ற அஞ்சலிக்கு கண்கள் கலங்கியது.

சில நொடிகள் கடந்ததும் தன்னை திடப்படுத்திக் கொண்டவர் அஞ்சலியையும் குழந்தையையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

வாசல் வரை வந்ததும்.. “நில்லுடா.. முதமுதல்ல குழந்தையோட வீட்டுக்கு வர்ற.. ஆரத்தி எடுத்துட்டு வர்றேன்..” என்ற சாரதா வீட்டுக்குள் சென்றார்.

நிற்க பலமின்றி அஞ்சலி குழந்தையுடன் தடுமாற.. அவளை தாங்கி பிடித்தான் உதயா.

“தேங்க்ஸ் உதி..” என லேசாக புன்னகைத்தாள் அஞ்சலி.

அஞ்சலியையும் குழந்தையையும் தாங்கி பிடித்தபடி.. நின்றிருந்த உதயாவுக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தார் சாரதா.

அதுவரையில் எல்லாவற்றையும் எந்த உறுத்தலும் இன்றி செய்தவரின் மனதில் அப்போது ஓர் உறுத்தல் வந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அஞ்சலிக்கும் குழந்தைக்கும் தேவையான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார் சாரதா. உதயாவின் அப்பா ரவிச்சந்திரனும் தன் பேரனையே கொஞ்சுவது போல ஆசையாக ரசிப்பதும் கொஞ்சுவதுமாக இருந்தார்.

கல்லூரி முடிந்து வந்த உதயாவின் தங்கை மானசியும் குழந்தையை விழிகள் விரித்து லேசாக தொட்டு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

தனக்கும் தன் குழந்தைக்கும் ஒண்டுவதற்கு ஒரு நிழல் கூட இல்லையே என தவித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு.. பாசமான அந்தக் குடும்பத்துடன் ஒன்றிப்போவது எளிதாக இருந்தது. இதெல்லாம் உதயாவால் தான் என நினைத்துக் கொண்டாள்.

அன்றைய நிகழ்வுகளை மனதில் அசைபோட்ட படியே மொட்டை மாடியில் நின்றிருந்தான் உதயா.

“ஏ.. சுண்டெலி.. புக்கை தட்டி விட்டுட்டு போற..”

“அய்யோ உதி.. நான் சுண்டெலி இல்லை.. அஞ்சலி..” என தன் பிடியிலிருந்து நழுவி ஓடிய அதே விளையாட்டுத்தனமான சிறுபெண்ணாக தான் அஞ்சலியை இப்போதும் பார்க்க தோன்றுகிறது உதயாவுக்கு.

அப்போது அங்கே வந்த சாரதா.. “உதி.. அஞ்சலி தான் நீ விரும்புன பொண்ணா..” என கேட்டார்.

பதில் பேசாமல் மௌனமாக அவர் முகத்தை பார்த்தான் உதயா.

Bạn đang đọc truyện trên: WatTruyen.Top